கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதற்கு எதிரான நடவடிக்கை கடுமையாகிறது
போலியான நிறுவனங்களின் பெயரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையை, சிங்கப்பூர் நாணய வாரியம் கடுமையாக்குவதாகத் தெரிவித்துள்ளது.
போலியான நிறுவனங்களின் பெயரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நபர்கள், நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையை, சிங்கப்பூர் நாணய வாரியம் கடுமையாக்குவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில், சட்டவிரோதமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட போலி நிறுவனங்களின் கணக்குகள் சிலவற்றை மூடியதாகக் கூறியது வாரியம்.
பொதுவாகச் சட்டத்தை ஏமாற்ற விரும்புவோர், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களையே அதிகம் பயன்படுத்துவர்.
ஆனால், நிதித்துறையிலும், வர்த்தகத்திலும் முன்னணி நடுவமாகத் திகழும் சிங்கப்பூரில் ஒரு வர்த்தக நிறுவனத்தைப் பதிவு செய்வது எளிது என்பதால் இங்கே பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வழியாகவும் சிலர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயல்கின்றனர்.
மேலும், உலகின் பல நாடுகளோடு சிங்கப்பூர் பணப் பரிவர்த்தனை செய்து வருகிறது. அதனால் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையின் மூலம் சிங்கப்பூர் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்று வாரியம் தெரிவித்தது.
முடுக்கிவிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின்கீழ், சந்தேகத்துக்கிடமான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடக்கூடிய போலி நிறுவனங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதனுடன் தகவல் பகுப்பாய்வு, கட்டமைப்புப் பகுப்பாய்வு மூலமாகவும், வங்கிகள் சட்டவிரோத நடவடிக்கைகளை அடையாளம் காண முயன்று வருகின்றன.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைக்கு எதிரான துறை, கடந்த மூவாண்டுகளில் அதன் நிபுணர்களின் எண்ணிக்கையை இருபதிலிருந்து முப்பதாக அதிகரித்துள்ளது.