சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை ஐவரிலிருந்து மீண்டும் இருவருக்குக் குறைக்கப்படுகிறது
சிங்கப்பூரில் கிருமிப்பரவல் அதிகரித்துவரும் சூழலில் சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை ஐந்திலிருந்து மீண்டும் இரண்டுக்குக் குறைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கிருமிப்பரவல் அதிகரித்துவரும் சூழலில் சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை ஐந்திலிருந்து மீண்டும் இரண்டுக்குக் குறைக்கப்படுகிறது.
அந்தக் கட்டுப்பாடு வரும் திங்கட்கிழமை (27 செப்டம்பர்) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்)24ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
அதே போல, ஒரு நாளுக்கு ஒரு வீட்டுக்கு அதிகபட்சம் இருவர் மட்டுமே செல்லலாம்.
வீடுகளுக்குச் சென்றாலும், நண்பர்களை வெளியில் சென்று சந்தித்தாலும், ஒருவர் நாளொன்றுக்கு ஒரு ஒன்றுகூடலில் மட்டுமே ஈடுபடலாம்.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்களை வெளியிட்டது.
முகக்கவசங்களை முறையாக அணிந்துகொள்ளுமாறும், சமூக நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறும் பணிக்குழு கேட்டுக்கொண்டது.
குறிப்பாக, மூத்தோரும், கடுமையாக நோய்வாய்ப்படக்கூடிய அபாயத்தில் இருப்போரும் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. அவர்கள் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
சிங்கப்பூரில் தற்போதுள்ள கிருமிப்பரவலைப் பார்க்கும்போது அடுத்த வாரம், நாளொன்றுக்கு 3,200சம்பவங்கள் கூட பதிவாகலாம் என்று பணிக்குழு தெரிவித்தது.
சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியைக் குறைக்க, கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவது அவசியமாகிறது என்றும் அது தெரிவித்தது.