இந்திய சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அமையவிருக்கும் சிண்டாவின் புதிய திட்டங்கள்
சிங்கப்பூரின் இந்திய சமூகம் பயன்பெறவேண்டி, சிண்டா வகுத்துள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றி காணப்படவேண்டும் எனில், சமூகத்தின் ஆதரவு இன்றியமையாதது என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டது.
மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப, இந்திய சமூகத்தின் தேவைகளும் மாறி வருகின்றன.
அதற்கேற்ப பல புதிய திட்டங்களை இவ்வாண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கம்.
அத்தகைய திட்டங்கள் பற்றி, சமூகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறார்கள், மாணவர்கள், இளையர்கள், பெற்றோர்கள் என இந்திய சமூகத்தின் பல தரப்பினருக்கும் உகந்த மாறுபட்ட திட்டங்களை சிண்டா, இவ்வாண்டு செயல்படுத்தவிருக்கிறது.
நிகழ்ச்சியில், பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே கல்வியில் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார், சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி, குமரன் பரதன்.
இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு சிண்டா வகுத்துள்ள திட்டங்கள் பற்றியும், திரு பரதன், அந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூறினார்.
கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீதும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் இந்திய சமூகம் பயன்பெறும் நோக்கில் , சிண்டா திட்டங்களை வகுத்துள்ளது. அவை வெற்றிகரமாகச் செயல்பட சமூகத்தின் ஆதரவு இன்றியமையாதது என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டது.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுமார் 300 சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக, சிண்டாவின் தலைவரும், சட்ட, நிதி அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா கலந்துகொண்டார்.