COVID-19: சிங்கப்பூரில் உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு டெல்ட்டா ரகக் கிருமித்தொற்று
சிங்கப்பூரில் உள்ளூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு டெல்ட்டா (Delta) ரகக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ளூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு டெல்ட்டா (Delta) ரகக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் உருமாற்றம் பெற்ற புதுரகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 449.
அவர்களில் 428 பேர் இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 9 பேர் தென்னாப்பிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட பீட்டா (Beta) வகைக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர் எனச் சுகாதார அமைச்சு தகவல் அளித்துள்ளது.
டெல்ட்டா வகைக் கிருமித்தொற்று கவலைக்குரியது என்றும் அது அதிவேகத்தில் பரவுவதால் பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயங்குகின்றன என்றும் கூறப்பட்டது.
சென்ற மாதம், உள்ளூர் அளவில் மொத்தம் 476 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அண்மையில் அதிகரித்த டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பிலான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
அப்போதிலிருந்து உள்ளூர் அளவில் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று சமூக அளவில் இருவருக்கு மட்டுமே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.