சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்தை மேலும் ஒத்திவைக்கும் மலேசியாவின் கோரிக்கையை சிங்கப்பூர் பரிசீலிக்கும்: போக்குவரத்து அமைச்சர்
சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்தை மேலும் ஒத்திவைக்கும் மலேசியாவின் கோரிக்கையை சிங்கப்பூர் வலுவாகப் பரிசீலிப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்தை மேலும் ஒத்திவைக்கும் மலேசியாவின் கோரிக்கையை சிங்கப்பூர் வலுவாகப் பரிசீலிப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.
அந்தத் திட்டத்துக்கான பணியை இம்மாதம் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதற்கு இரு நாடுகளும் 2018ம் ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்தன.
அதிவேக ரயில் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் திரு. காவ் சொன்னார்.
மலேசியா அந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ஆலோசித்துவருவதால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டதை அவர் சுட்டினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னதாகத் திட்டத்தை மேலும் ஒத்திவைக்கும் சாத்தியம் குறித்து மலேசியா கேட்டதாக அமைச்சர் சொன்னார்.
மாற்றங்கள் குறித்து தொடர்ந்து கலந்தாலோசிக்க அது வழியமைக்கும் என்று மலேசியா கூறியுள்ளது.
பொறியியல் மாணவர்களிடம் காணொளி மூலம் உரையாடியபோது அமைச்சர் காவ் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு வகுக்கப்பட்ட பல ரயில் திட்டங்களில் அதிவேக ரயில் திட்டமும் ஒன்று என அவர் கூறினார்.