வியட்நாம் சென்றிருந்த SMU மாணவர்கள் 20 பேர் பேருந்து விபத்தில் காயம்
வியட்நாமில் நேர்ந்த பேருந்து விபத்தில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
வியட்நாமில் நேர்ந்த பேருந்து விபத்தில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டு சமூகச் சேவைத் திட்டத்திற்காகப் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து ஹியூ (Hue) நகரத்திற்குச் சென்ற 30 மாணவர்களில் அவர்கள் அடங்குவர்.
மே 11-ஆம் தேதி மாணவர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாகப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பேருந்து சாலையோரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்களுக்குச் சிறு காயங்கள், கழுத்தில் காயம், கால் எலும்பு முறிவு, மணிக்கட்டு எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஹியுவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கால் எலும்பு முறிவு, கழுத்துக் காயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் பயணம் செய்யும் அளவு குணமடைந்ததும் மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் சிங்கப்பூருக்குத் திரும்புவர்.
காயமடையாத மூன்று மாணவர்கள் ஏற்கனவே சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளனர்.
வியட்நாமியர்களான பேருந்து ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டியும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.