ரயில் நிலையங்களில் நடக்கும் சோதனைகள் யாரையும் குறிவைத்து நடத்தப்படுவதில்லை : காவல்துறை
பெருவிரைவு ரயில் நிலையங்களில் நடத்தப்படும் பாதுகாப்புச் சோதனைகளில் காவல்துறை அதிகாரிகள் மலாய்க்காரர்களைக் குறிவைப்பதாக விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை எனச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியிருக்கிறது.
பெருவிரைவு ரயில் நிலையங்களில் நடத்தப்படும் பாதுகாப்புச் சோதனைகளில் காவல்துறை அதிகாரிகள் மலாய்க்காரர்களைக் குறிவைப்பதாக விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை எனச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியிருக்கிறது.
பீஷான் பெருவிரைவு ரயில் நிலையத்தில் ஓர் ஆடவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்துவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வலம் வருவது தொடர்பில் காவல்துறை அவ்வாறு தெரிவித்தது.
அதில் அதிகாரிகளை நோக்கி ஆடவர் கத்துவதும் சைகைகள் காட்டுவதும் தெரிகிறது.
அத்தகைய சோதனைகள் மலாய்க்காரர்களைக் குறிவைப்பதாக இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் காவல்துறை, Facebook பதிவில் தெரிவித்தது.
அத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை, அடிப்படையற்றவை, பொறுப்பற்றவை என்றும் அவை இனப் பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு இனங்கள் அல்லது சமூகங்களுக்கு இடையே வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை இணையத்தில் பதிவுசெய்வதைக் கடுமையாகக் கருதுவதாய்க் காவல்துறை தெரிவித்தது.
அவ்வாறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள சம்பவம் மார்ச் 5ஆம் தேதி நிகழ்ந்தது.
அன்றைய தினம் பணியிலிருந்த அதிகாரிகள் சோதித்த பொதுமக்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர் அல்லாதோர் என்று காவல்துறை தெரிவித்தது.