சூயஸ் கால்வாய் வழிமறிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட கப்பல்கள் இவ்வாரம் சிங்கப்பூரை வந்தடையும்
சூயஸ் (Suez) கால்வாயில் அண்மையில் ஏற்பட்ட போக்குவரத்துச் சிக்கலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட கப்பல்கள் இந்த வாரம் சிங்கப்பூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறியுள்ளார்.
சூயஸ் (Suez) கால்வாயில் அண்மையில் ஏற்பட்ட போக்குவரத்துச் சிக்கலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட கப்பல்கள் இந்த வாரம் சிங்கப்பூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறியுள்ளார்.
Ever Given சரக்குக் கப்பல் நீர்வழியை அடைத்துக்கொண்டிருந்ததால், விநியோகிக்கப்பட வேண்டிய பொருள்கள் தேங்கிப்போயின.
நிலைமை சீரடைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் கணிப்பது கடினம் என்றார் திரு. சீ.
அது உலகத்தின் தேவை, விநியோகம் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது என்றார் அவர்.
எனினும், அவற்றைச் சமாளிக்கக் கூடுதல் கருவிகள், ஊழியர்கள், அணைகரைகள் ஆகியவற்றைச் சிங்கப்பூர் தயார் செய்துவருவதைத் திரு. சீ சுட்டினார்.
விநியோகம் தாமதமடைவதைத் தவிர்க்கக் கப்பல் நிறுவனங்கள் விரைந்து செயல்படுவதற்கு, சிங்கப்பூரின் கொள்கலன் துறைமுகம் அவற்றோடு அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
கடல்துறை ஊழியர்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிருமிப்பரவலின்போது, துறைமுகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்த கடல்துறை ஊழியர்களின் சேவைக்கு நன்றிதெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு. சீ அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.