பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சந்தேகத்தின் பேரில் ஆடவர்மீது விசாரணை
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீதான நீதிமன்ற விசாரணை இன்று தொடங்கியது.
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீதான நீதிமன்ற விசாரணை இன்று தொடங்கியது.
பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் தொடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது.
இம்ரான் காசிம் (Imran Kassim) என்ற அந்த ஆடவர் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கியில் இருக்கும் ஓர் ஆடவருக்கு 450 வெள்ளி அனுப்பியதாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பிரசுரங்களை அச்சிட அவர் அந்தப் பணத்தை அனுப்பியதாக நம்பப்படுகிறது.
Western Union Global Network சேவை வழி, அவர் பணம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையின்போது குற்றத்தை அவர் ஒப்புக்கொள்கிறாரா என நீதிபதி வினவினார்.
அதற்கு பதிலளித்த இம்ரான், தாம் சிங்கப்பூர்ச் சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மட்டுமே அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
பணத்தை அனுப்பியதை மட்டும் தம்மால் ஒப்புக்கொள்ள முடியுமே தவிர, குற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாது என இம்ரான் கூறினார்.
வெளிநாட்டில் ஆயுதமேந்திப் போராடத் திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இம்ரான், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குப் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ, 500,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இவ்வேளையில் பயங்கரவாதக் குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு நிதியுதவி அல்லது வேறெந்த உதவியும் வழங்கக்கூடாது என்று உள்துறை அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.