TOC இணையத்தளத்தின் ஆசிரியர் மீது நாளை அவதூறுக் குற்றச்சாட்டு - சிங்கப்பூர்க் காவல்துறை
சமூக, அரசியல் இணையத்தளமான TOC எனப்படும் The Online Citizen-இன் ஆசிரியர் டெர்ரி ஸு யுவான் சென் மீது நாளை அவதூறுக் குற்றஞ்சாட்டப்படும் என்று சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக, அரசியல் இணையத்தளமான TOC எனப்படும் The Online Citizen-இன் ஆசிரியர் டெர்ரி ஸு யுவான் சென் மீது நாளை அவதூறுக் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்று சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதிய டி கோஸ்டா டேனியல் அகஸ்டினும் அதே போன்று குற்றஞ்சாட்டப்படுவார்.
The Take Away From Seah Kian Ping’s Facebook Post என்ற அந்தக் கட்டுரையின் தொடர்பில் 36 வயது ஸு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆக உயர் அதிகாரிகளிடையில் ஊழல் நிலவுவதாகவும் அரசமைப்புச் சட்டம் தவறான முறையில் கையாளப்படுவதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், அந்தக் கட்டுரை, அமைச்சரவை உறுப்பினர்கள் ஊழல் புரிவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை விடுத்திருக்கிறது என்றார்.
அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் அவற்றை அப்படியே விட்டுவிட்டால் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் மதிப்பும் கேள்விக்குள்ளாகலாம் என்றும் திரு. அம்ரின் தெரிவித்தார்.