சிங்கப்பூர்-மலேசியா சிறப்புப் பயண ஏற்பாடு - அடுத்து ரயில் பயணங்கள் அனுமதிக்கப்படலாம்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் அடுத்து ரயில் பயணங்கள் அனுமதிக்கப்படலாம்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் அடுத்து ரயில் பயணங்கள் அனுமதிக்கப்படலாம்.
அது குறித்து வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தகவல் வெளியிட்டார்.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்குமென அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு பயணம் மேற்கொள்வோர், ஜொகூர் பாலம்வழி குறிப்பிட்ட பேருந்துகளில் நாடுகளிடையே பயணம் மேற்கொள்ளமுடியும்.
அடுத்து ரயில் பயணங்கள் அனுமதிக்கப்படலாம் என்று அமைச்சர் கான் கூறினார்.
"ரயில்களையும் பேருந்துகளையும் எளிதில் நிர்வகிக்கமுடியும். பயணிகளுக்கான வரம்பை எளிதில் நடைமுறைப்படுத்தமுடியும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கச் சிறிது காலம் எடுக்கலாம்," என்று அவர் சொன்னார்.
எல்லைகளைக் கடக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்க, ஒருவித முன்பதிவுச் செயல்முறையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகலாம் என்று திரு. கான் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் பயணம் மேற்கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை வார அடிப்படையில் மறுஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- CNA/mt