வேலைகள் அதிகமாக உள்ளன, ஆனால் ஆள்கள் இல்லை - புதிய பயணக் கட்டுப்பாடுகளால் கட்டுமான நிறுவனங்கள் கவலை
வேலைகள் அதிகமாக உள்ளன, ஆனால் ஆள்கள் இல்லை - புதிய பயணக் கட்டுப்பாடுகளால் கட்டுமான நிறுவனங்கள் கவலை
இந்தியாவில் அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்கள் காரணமாக, அங்கிருந்து வரும் சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கான நுழைவு அனுமதி
குறைக்கப்படும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பு உள்ளூர்க் கட்டுமான நிறுவனங்களைப் பாதித்துள்ளது.
கட்டுமானத் துறையில் வேலை செய்யும் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருபவர்கள்.
சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதி இருந்தும் அவர்களை இந்தியாவிலிருந்து எப்படி கொண்டுவருவது என்று விடை தெரியாமல் நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன.
இந்தச் சவாலை எப்படிக் கட்டுமான நிறுவனங்கள் சமாளிக்கின்றன, என்னென்ன வழிகளை ஆராய்ந்து வருகின்றன என்பதைச் சில கட்டுமான நிறுவனங்கள்"செய்தி"யிடம் பகிர்ந்து கொண்டன.
கடந்த ஓராண்டாகவே மனிதவளத்தில் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறோம், ஒரு சிலருக்குத் தான் நுழைவு அனுமதி கிடைக்கிறது.
இந்தியாவில் தற்போது நிலைமை சரியில்லாததால் கிடைக்கும் சில அனுமதிகளிலும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.
வேலைகள் அதிகமாக உள்ளன, மற்ற நிறுவனங்களிடம் ஆள்கள் அதிகம் இருந்தால் அவர்களிடம் உதவி கேட்கிறோம்.
ஊழியர் பற்றாக்குறையால் பழைய வேலைகளே நிலுவையில் உள்ளதால் புதிய வேலைகளை பலமுறை சிந்தித்துத்தான் எடுக்கிறோம்.
- திரு. மலைக்கொழுந்து (Straits Teamwork)
வேலைகள் தாமதமாவதால் நட்டம் அதிகரிக்கிறது. அதனால் புதிய வேலைகள் பலவற்றை எடுக்கவில்லை.
- திரு. மணி மலைச்சாமி (MMM Contract Services)
புதிய கட்டுப்பாடுகள் சவாலானது தான். இருப்பினும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி உற்பத்தித்திறனைக் கூட்ட முயன்று வருகிறோம்.
ஆள்கள் இல்லை என்பதால் நிறுவனங்கள் மூடப்படவில்லை, சிறு நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் தேவைகளை அறிந்து அவர்கள் மனிதவளத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம்
வேலை அதிகமாக உள்ளதால் இருக்கும் ஊழியர்களை வைத்து நீண்டகாலத்திற்கு வேலைகளைத் தொடர முடியாது. இப்போது நிலைமை சரியில்லை அதனால் முடங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.
வாடிக்கையாளர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு, நட்டத்தைக் குறைக்க உதவலாம்.
-திரு. கலையரசன் (Perfect Technologies)
சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கிறது, அது பாராட்டக் கூடியது.
கடந்த ஓராண்டாக முடங்கியிருந்த கடுமானத் தொழில் தற்போது தான் மீண்டு வருகிறது ஆனால் இந்தப் புது அறிவிப்பு கட்டுமானத்துறைக்கு பெரும் அடி தான்.
அதனால் என்ன செய்வதென்று புரியவில்லை.
ஆபத்தான பகுதிகளிலிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தும் நாள்களை அதிகரிக்கலாம். நிறுவனங்களின் தேவை அறிந்து நுழைவு அனுமதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்
- திரு. பிரகாஷ் (Haran Hari Pte. Ltd)
இன்று இரவு மணி 11: 59 முதல் புது விதிமுறைகள் நடப்பிற்கு வருகின்றன.