கடைசி ஆசை இந்தியாவில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் - நோயாளியின் கனவை நிறைவேற்றிய டான் டொக் செங் மருத்துவமனை
கடைசி ஆசை இந்தியாவில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் - நோயாளியின் கனவை நிறைவேற்றிய டான் டொக் செங் மருத்துவமனை
குழந்தைகளுக்காகத் தாங்கள் இறக்கவும் தயார் என்று பெற்றோர் பலர் கூறுவர்.
ஆனால் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி ராஜேஷ்வரி தமது பிள்ளைகளுக்காக உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தார்.
2019 ஆம் ஆண்டு புற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ராஜேஷ்வரி தமது 12 வயது மகளையும், 9 வயது மகனையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் COVID-19 நோய்ப்பரவல் காலத்தில் தம்முடைய 2 குழந்தைகளைக் காண இந்தியா செல்ல வேண்டும் என்று நினைத்தார் ராஜேஷ்வரி.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ராஜேஷ்வரியின் உடல்நலம் புற்றுநோயால் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர் எப்போதும் வேண்டுமானும் இறக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சினர்.
ராஜேஷ்வரி உடல் விமானப் பயணத்திற்கு ஒத்துழைப்பது கடினம் என்றும் டான் டொக் செங் மருத்துவமனை (Tan Tock Seng Hospital) எண்ணியது.
குழந்தைகளின் நினைவாக ராஜேஷ்வரி, அவர்களின் படத்தைத் தொலைபேசியில் பார்த்துக் கொண்டே இருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர்.
புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்யும் போது பேசும் திறனை இழந்தார் ராஜேஷ்வரி.
அவரின் கடைசி ஆசை பிள்ளைகளை நேரில் காண வேண்டும் என்பதே.
அதை மருத்துவர்கள் புரிந்துகொண்டனர்.
ஆனால் அப்போது இந்தியாவில் நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தது. போதுமான விமானச் சேவைகளும் இல்லை.
ஏர் இந்தியா, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரவு ஆணையம், வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் உதவியோடு ராஜேஷ்வரி இந்தியா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
48 மணி நேரத்தில் அவசர அவசரமாகப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பயணிகள் மூவர் தங்கள் சீட்டை விட்டுக்கொடுத்ததால், ராஜேஷ்வரியின் பயணம் உறுதியானது.
இருப்பினும் விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் ராஜேஷ்வரிக்கு பல அனுமதிகள் கிடைத்தன.
உடல்நலம் ஒத்துழைக்காவிட்டாலும் திருச்சிக்கு செல்லும் அந்த விமானம்தான் ராஜேஷ்வரியின் ஆசையை நிறைவேற்ற நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது.
பல தடைகளையும் தாண்டி சொந்த ஊருக்குச் சென்றார் ராஜேஷ்வரி.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரைப் பார்க்கக் குழந்தைகள் வந்தது, ராஜேஷ்வரிக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஊருக்குச் சென்ற இரண்டு வாரங்களில் 44 வயது ராஜேஷ்வரி 2020 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி காலமானார்.
குழந்தைகள்தான் அவருக்கு முக்கியம், அந்த விமானப் பயண ஏற்பாடு நடந்ததை தம்மால் இப்போதும் நம்பமுடியவில்லை என்கிறார் ராஜேஷ்வரியின் கணவர் மணி.
தமது மனைவியின் பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் திரு. மணி நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
நீண்ட நாள்களாக அவருக்கு மருத்துவம் செய்த மருத்துவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார் மணி.
ராஜேஷ்வரி மிகத் தைரியமானவர், அவர் தம் பிள்ளைகளுக்காகக் கடைசி வரை போராடினார் என்றனர் மருத்துவர்கள்.
அவரது அன்பும் தைரியமும் எப்போதும் தங்கள் நினைவில் இருந்து நீங்காது என்றனர் மருத்துவர்கள்.
- CNA/ja(cy)