சிங்கப்பூரில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாவதற்கு வலுவான ஆதரவு
சிங்கப்பூரில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு வலுவான ஆதரவு இருப்பதாய் ஆய்வு ஒன்று கூறுகிறது.
சிங்கப்பூரில் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு வலுவான ஆதரவு இருப்பதாய் ஆய்வு ஒன்று கூறுகிறது.
பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டும் அரசாங்கப் பிரிவான REACH அமைப்பு அந்த ஆய்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.
வனவிலங்கு, பறவைகளுக்கான சட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து இணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.
நீ சூன் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கடந்த பிப்ரவரி மாதம் அதன் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கக் குழு ஒன்றை அமைத்தார்.
இயற்கை ஆர்வலர்கள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், சமயக் குழுக்கள், நகர மன்றங்கள், அடித்தள அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
ஜூன் மாதம் முதல் கடந்த மாதம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு கருத்துக்களையும் பதிவுசெய்தனர்.
விலங்குகளை அனுமதியின்றி விடுவிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று 81 விழுக்காட்டினர் கூறினர்.
வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது என்று ஆய்வில் பங்கெடுத்த 70 விழுக்காட்டினர் கூறினர்.
காகம், மைனா, புறா போன்ற பறவைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 61 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
கொல்லப்படுவது, செல்லப்பிராணியாக வைத்துக்கொள்வது, உரிமம் இன்றி அவ்வகைப் பறவைகளைப் பிடிப்பது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
வனவிலங்குகளின் தொடர்பில் தொடர்ந்து குற்றம்புரிவோருக்கான தண்டனை மேலும் கடுமையாக்கப்படலாம் என்று 90 விழுக்காட்டினர் கூறினர்.
தனிநபர்களைவிட அத்தகைய குற்றங்களைப் புரியும் நிறுவனங்களுக்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்று 89 விழுக்காட்டினர் கூறினர்.