அமெரிக்கா: அடையாளத் திருட்டு, கணினிகளை ஊடுருவியது ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் ஆடவர்மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரர் ஒருவர் மீது இணைய மோசடி தொடர்பாக அமெரிக்காவில் 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரர் ஒருவர் மீது இணைய மோசடி தொடர்பாக அமெரிக்காவில் 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சியாட்டில் நகரில் அடையாளத் திருட்டு, கணினித் திறனை ஊடுருவி மற்றொரு கணினிக்கு மாற்றியது ஆகியவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
ஹோ ஜியா ஜுன் (Ho Jia Jun) என்ற அந்த ஆடவருக்கு வயது 29. அவர் மேத்யூ ஹோ (Matthew Ho) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
திறன் ஊடுருவப்பட்ட கணினிகளைக் கொண்டு அவர் மின்னிலக்க நாணயங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது.
கலிஃபோர்னியா, டெக்சஸ் ஆகிய நகரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் அடையாளங்கள், கடன் அட்டைத் தகவல்கள் ஆகியவற்றையும் அவர் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சென்ற மாதம் 26ஆம் தேதி மேத்யூ ஹோவை சிங்கப்பூர்க் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள்பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில், 2017 அக்டோபரிலிருந்து சென்ற ஆண்டு பிப்ரவரி வரை மேத்யூ ஹோ மின்னிலக்க நாணய உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது மின்னிலக்க நாணயத்தின் மதிப்பு உச்சத்தில் இருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இணைய மோசடிக்காக மேத்யூ ஹோவுக்கு 20 ஆண்டுகள் வரையும், சாதனங்களை ஊடுருவியதற்காக 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.