அங் மோ கியோவில் பெண் கொலை; ஆடவருக்குக் கடும் காயம்
அந்த ஆடவர் மாண்ட பெண்ணின் முன்னாள் கணவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அங் மோ கியோவில் உள்ள ITE College Central வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் 56 வயது பெண் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
அவர் கத்தியால் தாக்கப்பட்டு மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் சம்பவத்தைக் காவல்துறை, கொலை என வகைப்படுத்தியிருக்கிறது.
நேற்று இரவு ஏழே முக்கால் மணி அளவில், சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
கடுமையாகக் காயமுற்ற நிலையில் காணப்பட்ட 66 வயது சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அந்த ஆடவர் மாண்ட பெண்ணின் முன்னாள் கணவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த அசம்பாவிதம் குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக, ITE College Central பேச்சாளர் இன்று Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடந்துவருவதால் அந்தச் சம்பவம் பற்றி மேலும் கருத்துரைக்க இயலவில்லை என்றும் பேச்சாளர் கூறினார்.
அது தனிப்பட்ட ஒரு சம்பவம் என்றும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் , ITE College Central வளாகம் தொடர்ந்து, பாதுகாப்பானதாக இருப்பதாய் அந்தக் கல்வி நிலையம் உறுதி தெரிவித்தது.