இம்மாதம் மட்டுமே 7 வேலையிட மரணங்கள் பதிவு - கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு
சிங்கப்பூரில், இம்மாதத்தில் மட்டும் 7 வேலையிட மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சிங்கப்பூரில், இம்மாதத்தில் மட்டும் 7 வேலையிட மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுவதும் நேர்ந்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 30ஆக இருந்தது.
இம்மாதத்தில் பதிவான வேலையிட மரணங்களின் எண்ணிக்கை மிகுந்த கவலை அளிப்பதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது கூறியுள்ளார்.
அது, இவ்வாண்டுக்கான ஒரு கவலையான போக்கைக் குறிப்பிடுவதாக தமது Facebook பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
தகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருந்திருந்தால் அந்த மரணங்களைத் தடுத்திருக்கலாம் என்பதைத் திரு. ஸாக்கி சுட்டினார்.
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், தகுந்த பயிற்சி, அனுமதியின்றி இயந்திரங்களை இயக்கிய இருவர் மாண்டனர்.
கட்டுமானம், உற்பத்தி, கடற்துறை சார்ந்த அதிக அபாயம் மிகுந்த வேலையிடங்களில் மனிதவள அமைச்சு கண்காணிப்பை வலுப்படுத்தவுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தகுந்த பயிற்சி, அனுமதியின்றி இயந்திரங்களை இயக்கும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களின் வேலை அனுமதியும் ரத்து செய்யப்படலாம்.