உலகின் ஆகப் போட்டித்தன்மைமிக்க பொருளியல் - சிங்கப்பூர்த் தலைவர்கள் பாராட்டு
உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க பொருளியலாக இவ்வாண்டு சிங்கப்பூர் தெரிவுபெற்றுள்ளது குறித்து சிங்கப்பூர்த் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க பொருளியலாக இவ்வாண்டு சிங்கப்பூர் தெரிவுபெற்றுள்ளது குறித்து சிங்கப்பூர்த் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தடையற்ற பொருளியல், வலுவான ஊழியர்-முதலாளி உறவு, திறன்மிக்க ஊழியரணி, திடமான உள்கட்டமைப்பு, மாற்றத்திற்கான உடனடி அரசாங்க நடவடிக்கை ஆகிய காரணங்களால் சிங்கப்பூர் முதலிடத்தை எட்டியுள்ளதாக துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் தமது Instagram பதிவில் குறிப்பிட்டார்.
அதற்கு முத்தரப்புப் பங்காளிகளும் எதிர்காலப் பொருளியல் மன்றமும் ஆற்றிய பணிகள் முக்கியம் என்று கூறி அவற்றுக்குத் திரு. ஹெங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அந்தத் தரநிலையில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது ஊக்கமளிப்பதோடு நாட்டின் வலிமையான அம்சங்களைப் பிரதிபலிப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
Facebook பதிவு ஒன்றில் அவர் அதனைத் தெரிவித்தார். தரவரிசை மேம்பட்டதற்கு நிலையான அசாங்கம், வேறுபட்ட திறன்கொண்ட ஊழியரணி-உள்ளிட்ட காரணங்களை அவர் சுட்டினார்.
தற்போதைய நிச்சயமற்ற உலகப் பொருளியலுக்கிடையே, சிறிய, தடையற்ற பொருளியலைக் கொண்ட சிங்கப்பூர் எதையும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அமைச்சர் சான் வலியுறுத்தினார்.