திருட்டு, காவல் அதிகாரியாகப் பாசாங்கு செய்து ஏமாற்றியதன் தொடர்பில் இளையருக்குத் தண்டனை
யீஷூன் உணவங்காடி நிலையத்திலிருந்து பணம் திருடியதற்கும், காவல் அதிகாரியாகப் பாசாங்கு செய்ய நண்பருக்கு உதவியதற்கும் 17 வயது இளையருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யீஷூன் உணவங்காடி நிலையத்திலிருந்து பணம் திருடியதற்கும், காவல் அதிகாரியாகப் பாசாங்கு செய்ய நண்பருக்கு உதவியதற்கும் 17 வயது இளையருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி யீஷூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் நள்ளிரவுவாக்கில் இங் சியாங் சிங் (Ng Qiang Qing) 5 இளையர்களைச் சந்தித்தார்.
அந்த இளையர்கள் 15இலிருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் உடனடியாகப் பணம் ஈட்ட விரும்பினர்.
கடைகளுக்குள் புகுந்து திருடுவதே அதற்கான எளியவழி என்று முடிவெடுத்தனர்.
இளையர்களில் ஒருவர் நாற்காலியைப் போட்டுச் சுவர் மீது ஏறி, ஒரு கறி பஃப் (Curry puff) கடைக்குள் நுழைந்து, காசாளர் பெட்டியிலிருந்து சுமார் 1,000 வெள்ளி ரொக்கத்தைத் திருடினார்.
வெளியே காத்திருந்த இளையர்களில் மூவர், வெவ்வேறு கடைகளிலிருந்து 100 வெள்ளி முதல் 200 வெள்ளி வரை திருடினர்.
மற்றொரு சம்பவம் இந்த ஆண்டு மே 1ஆம் தேதி அன்று நடந்தது.
இங் தம் நண்பர்களோடு செந்தோசா தீவில் இருந்தார்.
அங்கு ஒரு பலகையில் தூங்கிக்கொண்டிருந்த பங்களாதேஷ் ஊழியர்களை எழுப்பி அங்கு தூங்கக்கூடாது என்று இளையர்கள் மிரட்டினர்.
இளையர்கள் காவல் அதிகாரிகளைப் போல் பாசாங்கு செய்தனர்.
ஊழியர்களின் வேலை உரிமத்தைக் கேட்பதைப் போன்று நடித்து அவர்களில் ஒருவரது பணப்பையிலிருந்து 379 வெள்ளியை எடுத்துக் கொண்டனர்.
மற்றோர் ஊழியர் பணப்பையைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
பின்னர் இங்கும் அவரது நண்பர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
காவல்துறை விசாரணையில், எல்லாரும் பிடிபட்டனர்.
ஓராண்டு சிங்கப்பூர் சிறுவர் தங்குவிடுதியிலும் ஈராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பும் இங்கிற்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இங் 180 மணி நேர சமூகச் சேவையும் ஆற்றவேண்டும்.