வரவு-செலவுத் திட்டம் 2015
சிங்கப்பூரின் வரவு-செலவுத் திட்டம் வரும் திங்களன்று நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தில் வருங்காலத்திற்கான திறன்கள் பற்றியும் அதிகம் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மீடியகார்ப் செய்தியின் பிரத்தியேக தொகுப்பு.
சிங்கப்பூரின் வரவு-செலவுத் திட்டம் வரும் திங்களன்று நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இன்றையத் தேவைகளையும், எதிர்கால தேவைகளையும் பூர்த்திச் செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று நிதியமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம் கோடிக்காட்டியுள்ளார். இவ்வாண்டு நாட்டின் பொன் விழா கொண்டாட்டம் என்பதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுக்காலத் தேவைகள், நிறுவனங்களுக்கு உதவி, வருங்காலத்துக்கான திறன்கள் ஆகிய மூன்று அம்சங்களுக்கு இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அதிக முக்கித்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிப்பதற்கான மேம்பட்ட திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கும் என்று நம்புகின்றனர் நிபுணர்கள்.
கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில், முன்னோடித் தலைமுறையினரை அங்கீகிரிக்கும் வகையில் பல திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.
அந்த வரிசையில் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கு உதவ அரசாங்கம் Silver Support திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறது.
அதோடு, சுகாதாரப் பராமரிப்பு, பொது போக்குவரத்து ஆகியவற்றில் கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர் மூத்தோர்.
பொருளியல் வளர்ச்சிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்துவரும் இல்லத்தரசிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிய நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தித் திறனை வளர்ப்பது நிதியமைச்சின் முக்கிய இலங்குகளில் ஒன்று.
புத்தாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகும்.
50 ஆண்டு வளர்ச்சியை சிங்கப்பூரர்களுடன் பகிர்ந்து கொள்ள சிறப்புச் சலுகைள் தரப்படும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
அனைத்துலக ரீதியில் சிங்கப்பூர் தொடர்ந்து போட்டியிட மாற்றங்கள் அவசியம்.
சவால்களைச் சமாளிப்பதற்கான திறன்களை சிங்கப்பூரர்களுக்கு வழங்குவது நாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.