"சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர், அரசாங்கத்திலும் அந்தக் கொள்கையைக் கொண்டு வந்தவர்." திரு கா. சண்முகம்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர், அரசாங்கத்திலும் அந்தக் கொள்கையைக் கொண்டு வந்தவர். மறைந்த திரு லீ குவான் இயூவிற்கு இந்தப் புகழ் மாலைகளைச் சூட்டினார் சட்ட, வெளியுறவு அமைச்சர் திரு கா. சண்முகம்.
சிங்கப்பூர்:சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர், அரசாங்கத்திலும் அந்தக் கொள்கையைக் கொண்டு வந்தவர். மறைந்த திரு லீ குவான் இயூவிற்கு இந்தப் புகழ் மாலைகளைச் சூட்டினார் சட்ட, வெளியுறவு அமைச்சர் திரு கா. சண்முகம். நேற்றிரவு Yishun வட்டாரத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய திரு சண்முகம், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் திரு லீ குவான் இயூவின் கொள்கை பல்வேறு வழிகளில் வெளிப்பட்டதாகக் கூறினார்.
ஒரு முறை திரு லீயுடன், அமெரிக்கப் பயணம் சென்றிருந்தபோது, விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
உணவுக்குப் பின் மூன்று பெரிய கரண்டி அளவு ஐஸ் கிரீம் வழங்கப்பட்டதாகவும் அதில் ஒன்றை மட்டுமே தாம் உண்டதாகவும் அவர் கூறினார். அதன் காரணமாகத் திரு. லீ தம்மைக் கடிந்துகொண்டதாகவும் தேவையானதை மட்டுமே கேட்டு வாங்கியிருக்க வேண்டும் என்று கூறியதாகவும் திரு. சண்முகம் குறிப்பிட்டார்.
அந்தச் சம்பவம் திரு லீயின் சிக்கனக் கொள்கையைப் பிரதிபலித்தது.
அதைப் போல, மக்களின் பணமானப் பொது நிதியை நிர்வகிப்பதிலும் அவர் கவனத்துடன் செயல்பட்டார் எனப் புகழாரம் சூட்டினார் திரு சண்முகம்.
உரைக்குப் பின் அமைச்சரும், மற்ற Nee Soon குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரு லீயின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். மொத்தம் மூவாயிரத்து ஐநூறு மெழுகுவர்த்திகள் நேற்று விநியோகிக்கப்பட்டன.