திரு லீக்கு மரியாதை செலுத்தும் விதமாக சூதாட்டக் கூடங்கள் நாளை மூடல்
சிங்கப்பூரின் இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தலங்களிலும் செயல்படும் சூதாட்டக் கூடங்கள், நாளை, நான்கு மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தலங்களிலும் செயல்படும் சூதாட்டக் கூடங்கள், நாளை, நான்கு மணி நேரம் மூடப்பட்டிருக்கும். மறைந்த முன்னைய பிரதமர் திரு லீ குவான் இயூவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாய், Resorts World Sentosa, Marina Bay Sands ஆகிய இரண்டும் தெரிவித்தன. பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை கூடங்கள் மூடப்பட்டிருக்கும். Resorts World, அரசுபூர்வ இறுதி ஊர்வலத்தின் நேரடி ஒளிபரப்பைத் தனது வளாகத்தில் திரையிடும். இதற்கிடையே, கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, கடைத் தொகுதிகள் அரசுபூர்வ இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பைத் திரையிடவிருக்கின்றன. Ion orchard, Star Vista, Bugis Junction முதலியவை உள்ளிட்ட தனது ஆறு கடைத்தொகுதிகளிலும் Capitand நிறுவனம் அந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. இருப்பினும், கடைத் தொகுதிகளில் உள்ள சில சில்லறைக் கடைகள், திரு லீக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மூடவிருக்கின்றன. Metro, Tangs முதலியவை அவற்றுள் சில. Lexas, Toyota, Suzuki ஆகிய கார் காட்சியகங்களும் நாளை மூடப்பட்டிருக்கும்.