'சின்னஞ்சிறு மேடை' நாடக போட்டி
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, தேசிய கல்விக்கழக தமிழ்மொழி மன்றம் ஏற்பாடு செய்த 'சின்னஞ்சிறு மேடை' எனும் நாடகப் போட்டி இன்று நடைபெற்றது.
சிங்கப்பூர்: தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, தேசிய கல்விக்கழக தமிழ்மொழி மன்றம் ஏற்பாடு செய்த 'சின்னஞ்சிறு மேடை' எனும் நாடகப் போட்டி இன்று நடைபெற்றது. அதில் தொடக்க நிலை நான்கு முதல் ஆறு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்கள் நடிப்புத் திறனை வெளிக்காட்டினர்.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், செம்பாவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்(Vikram Nair) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மாணவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்டிருக்கும் நாட்டத்தை, அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி காட்டியது.
நாடகப் போட்டியில் கலந்து கொண்டதன் வாயிலாக மாணவர்கள் பல நன்னெறிகளையும் கற்றுக் கொண்டனர்.
இத்தகைய போட்டிகள் தமிழ்ப் பாடத்தில் சிறந்து விளங்க உதவுவது மட்டுமில்லாமல், தமிழர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்ளவும் வழிவகுப்பதாக மாணவர்கள் கூறினர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மொழிப் பற்று அதிகரிப்பதோடு, மற்ற நற்பண்புகளையும் மாணவர்கள் கற்றுகொள்வார்கள் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.
இது போன்ற முயற்சிகள்மூலம், சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக வைத்திருக்க முடியும். அதோடு மறைந்த திரு லீ குவான் இயூவின் இரு மொழிக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதத்திலும் இது அமைவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.