பத்தாண்டில் செலவு, சுமார் 2.5 மடங்கு அதிகரிப்பு: நிதியமைச்சர் (வீடியோ)
நிதி அமைச்சர் Heng Swee Keat, வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டிருக்கிறார். "எதிர்காலத்துக்காக ஒன்றுசேர்ந்து பணியாற்றுவோம்" எனும் கருப்பொருளைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை அவர் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுப் பேசினார்.
சிங்கப்பூர்: நிதி அமைச்சர் Heng Swee Keat, வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டிருக்கிறார். "எதிர்காலத்துக்காக ஒன்றுசேர்ந்து பணியாற்றுவோம்" எனும் கருப்பொருளைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை அவர் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுப் பேசினார்.
சிங்கப்பூர், முன்னேற்றப் பாதையில் செல்லும் நிலையிலும் புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சொன்னார். செயல்முனைப்புடனும் ஆழ்ந்த புத்தாக்கச் சிந்தனையுடனும் அனைவரும் ஒன்றிணைந்து பொருளியலை உருமாற்றவேண்டும். அதன் மூலம் பரிவும் மீள்திறனும் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார் திரு. ஹெங்.
இந்த வரவு செலவுத் திட்டம், SG100 கொண்டாட்டங்களுக்கான பயணத்தின் தொடக்கம். பொருளியலை மேம்படுத்த, வலுவான நிறுவனங்களை உருவாக்குவதில் அரசாங்கம் முதலீடு செய்து புத்தாக்கத் தொழில்துறைகளைப் பேணி வளர்க்கும். மேலும் பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்குக் கல்வியிலும் சுகாதாரத்திலும் கூடுதலாக முதலீடு செய்யப்படும்.
புதிய நிதியாண்டில், கல்விக்காக 12.8 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும். பத்தாண்டுக்கு முன்பைவிட அது கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகம். கடந்த பத்தாண்டில், 5 மடங்கு அதிகரித்த சுகாதாரத் துறைக்கான செலவு, மேலும் கூட்டப்படும். சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நகர நிலவனப்பை உருமாற்றவும் நிதி-ஆதாரம் வழங்கப்படும். சென்ற பத்தாண்டில், செலவு, ஏறக்குறைய இரண்டரை மடங்காகியிருக்கிறது. வளர்ச்சியும் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டு மடங்காகியுள்ளது. அரசாங்கம், தொடர்ந்து விவேகத்துடன் செலவுசெய்ய வேண்டும் என்பதையும் நிதி அமைச்சர் வலியுறுத்தினார்