ஆட்குறைப்புக் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேவையை வலியுறுத்திய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் களமிறங்கவிருக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் ஆட்குறைப்புக் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேவையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் களமிறங்கவிருக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் ஆட்குறைப்புக் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேவையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தாம் வெற்றிபெற்றால் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்போவதாக அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பலர் தங்களின் கவலைகளைத் தம்மிடம் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார் டாக்டர் சீ.
மற்றொரு வேலை கிடைக்கும்வரை அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே அதில் தலையாயது.
நிலைமையை எவ்வாறு சமாளிப்பது, எங்கு உதவி நாடலாம் போன்ற ஆலோசனைகளை வழங்க தமது திட்டம் வகைசெய்யும் என்றார் அவர்.
மே தினக் கூட்டத்தில் பிரதமர் அத்தகைய காப்புறுதித் திட்டம் குறித்து பேசியதை டாக்டர் சீ சுட்டினார்.
அதற்குத் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருவதாக அவர் சொன்னார்.
திறன் மேம்பாடு முக்கியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. ஊழியர்களும் அதன்படி பல ஆண்டுகளாகத் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
இருப்பினும் வெளிநாட்டு ஊழியர்களை அரசாங்கம் தொடர்ந்து அதிக அளவில் இங்கு வரவழைப்பதாக டாக்டர் சீ தெரிவித்தார்.
அது பற்றித் தம்மிடம் பலர் குறைகூறியுள்ளதாக அவர் சொன்னார்.
இன்று மேற்கொண்ட தொகுதி உலாவின்போது டாக்டர் சீ செய்தியாளர்களிடம் அந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
புக்கிட் பாத்தோக் Industrial Park Aயில் தற்போது சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை பிரசாரக் கூட்டம் எதுவும் நடைபெறாது எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.