அச்சத்தை பரப்புவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைக் குறைகூறும் தர்மன்
அதே பிரசாரக் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அச்சத்தையும் பீதியையும் பரப்புவதாகக் குறைகூறியிருக்கிறார்.
அதே பிரசாரக் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அச்சத்தையும் பீதியையும் பரப்புவதாகக் குறைகூறியிருக்கிறார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அந்தக் கட்சி வாக்காளர்களுக்கு வழங்குவதாக அவர் சொன்னார்.
கொள்கைப் பரிந்துரைகள் என்ற பெயரில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி முன்வைப்பது, உண்மையில் அச்சத்தையும் பீதியையும் பரப்பும் அரசியல்.
அது தமக்குக் கவலையளிப்பதாகச் சொன்னார் திரு.தர்மன்.
வாக்குறுதிகளை அள்ளி இறைக்கும்போது, அதனால் அனைவருக்கும் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை அக்கட்சி தெரிவிப்பதில்லை. அது தவறு.
அப்படிப்பட்ட அரசியல், சிங்கப்பூருக்குப் பொருந்தாத ஒன்று.
நம்முடைய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, அது சரியான வழியல்ல என்றார் திரு. தர்மன்.
எடுத்துக்காட்டாக, மத்திய சேமநிதி பற்றி டாக்டர் சீ, பிரசாரக் கூட்டத்தில் பேசியதை அவர் நினைவுகூர்ந்தார்.
நமது கையிருப்பிலிருந்து 800 பில்லியன் வெள்ளி காணாமற்போய்விட்டதாக, பீக்கிங் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் ஒருவரை மேற்கோள்காட்டி, டாக்டர் சீ குறிப்பிட்டிருந்தார்.
அது முற்றிலும் தவறானது என்றார் திரு. தர்மன்.
இப்படிப்பட்ட தவறான வாதங்களை, நிதியமைச்சு உரிய ஆதாரங்களோடு மறுத்து வந்துள்ளது.
அதன் விவரங்கள், அரசாங்க இணையத் தளங்களில் காணக் கிடைக்கின்றன.
அது பற்றித் தாம் அளித்த விளக்கத்தில் பெரும்பகுதி புரியவில்லை என்று டாக்டர் சீ கூறியுள்ளதைத் திரு. தர்மன் சுட்டிக் காட்டினார்.
முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாதபோது அதைப் பற்றி ஏன் அச்சத்தைப் பரப்ப வேண்டுமென வினவினார் திரு. தர்மன்.