"அரசியல் அமைப்பு நன்றாக இயங்கி வருகிறது"
காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூவுடனும் தற்போதைய பிரதமர் திரு. லீ சியென் லூங்குடனும் இணைந்து மேம்படுத்திய அரசியல் அமைப்பு நன்றாய் இயங்கி வருவதாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு. கோ சோக் தோங் கூறியுள்ளார்.
காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூவுடனும் தற்போதைய பிரதமர் திரு. லீ சியென் லூங்குடனும் இணைந்து மேம்படுத்திய அரசியல் அமைப்பு நன்றாய் இயங்கி வருவதாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் திரு. கோ சோக் தோங் கூறியுள்ளார்.
இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
தற்போதைய அரசியல் அமைப்பு சிறந்த முறையில் இயங்கிவருவதற்குச் சில காரணங்களைத் திரு. கோ முன்வைத்தார்.
பொதுத் தேர்தலில் மக்கள் இனத்தையும் சமயத்தையும் பார்த்து வாக்களித்திருந்தால் அது சிங்கப்பூரை அழித்திருக்கும் என்று கூறிய திரு. கோ அதுவே தம்முடைய பெரிய அக்கறையாக இருந்தது என்றார்.
சிங்கப்பூர் அரசியலில் உள்ள குழுத்தொகுதித் திட்டம் அந்த நிலை ஏற்படுவதற்கு இடம் கொடுப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில், மக்களின் வாக்குகளைப் பெற, தலைவர்களைப் பற்றி பல கருத்துகள் வெளியிடப்பட்டதுண்டு.
மக்கள் செயல் கட்சித் தலைவர்களைப் பற்றி யாராவது அவதூறாகப் பேசினால், அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
அது குறித்து எதிர்கட்சிகள் குறைபட்டுக் கொண்டதுண்டு.
ஆனால் அரசியல், தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பது நம் அரசியல் அமைப்பின் ஓர் அங்கம்.
இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. இது நல்லது என்றார் திரு. கோ.
குழுத்தொகுதி முறை, தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் முறை, நாடாளுமன்ற நியமன உறுப்பினர் முறை முதலியவை சிங்கப்பூரில் துடிப்புமிக்க ஜனநாயகம் நிலவ உதவியிருப்பதாக அவர் சொன்னார்.
இந்த அரசியல் அமைப்பு தொடர்ந்து சிறப்பாக இயங்க, உண்மைக்கும் கட்டுக்கதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து மக்கள் அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என்றார் திரு. கோ.
அந்த முதிர்ச்சி அவர்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.