கடுமையாக்கப்படும் புதிய மோட்டார் சைக்கிள்களின் புகை அளவு கட்டுப்பாடு
புதிய மோட்டார் சைக்கிள்கள் வெளியேற்றும் புகை அளவின் கட்டுப்பாடு கடுமையாக்கப்படவிருக்கிறது.
புதிய மோட்டார் சைக்கிள்கள் வெளியேற்றும் புகை அளவின் கட்டுப்பாடு கடுமையாக்கப்படவிருக்கிறது.
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி அதனை அறிவித்தார்.
காற்றுத் தூய்மைக்கேட்டைக் கையாள்வது குறித்த மேலும் சில நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.
டீசல் வாகனங்களால் உண்டாகும் தூய்மைக்கேடு குறித்து ஆராய்வதும் அதில் அடங்கும்.
Euro 4. அதுதான் வெளியேற்றப்படும் புகையின் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவு.
அதனை எட்டுவதற்கான விதிகளைக் கடுமையாக்கவிருப்பதாகத் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
மன்றத்தில் இன்று தமது அமைச்சின் செலவினம் மீதான விவாதத்தின்போது அவர் அதனைத் தெரிவித்தார்.
கரியமில வாயு வெளியேற்றத்திலும் ஓசோன் மண்டலத்தைப் பாதிப்பதிலும் மோட்டார் சைக்கிள்களின் பங்கு கணிசமானது.
தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டுள்ள சூழலில் வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயுக்களின் கட்டுப்பாட்டு அளவை உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதாகத் திரு. மசகோஸ் கூறினார்.
புதிய கட்டுப்பாட்டு முறை கட்டங்கட்டமாக அறிமுகம் காணும்.
200cc-க்கு மேற்பட்ட பெரிய மோட்டார் சைக்கிள்களுக்கு அது 2018 ஜனவரியிலிருந்து நடப்புக்கு வரும்.
200cc அல்லது அதற்குக் குறைவான சக்திகொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 2020 ஜனவரியில் அது அறிமுகம் காணும்.
டீசல் வாகனங்கள் உலகளவில் பிரபலமடைந்துவரும் சூழலில் அவற்றால் சுகாதாரத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்த கவலை நிலவுகிறது.
அந்த வகையில் சிங்கப்பூரிலுள்ள டீசல் வாகனங்களில் டீசல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை முடிந்தவரை குறைப்பது போன்றவை ஆராயப்படவிருக்கின்றன.