உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகளில் பங்கேற்கவிருந்த சிங்கப்பூரருக்கு 4 ஆண்டுகள் தடை
காமன்வெல்த் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த சிங்கப்பூர் விளையாட்டாளர் முகமது கைரி இஷாக்குக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த சிங்கப்பூர் விளையாட்டாளர் முகமது கைரி இஷாக்குக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் எந்தவித விளையாட்டுப் போட்டியிலும் பங்கெடுக்க முடியாது.
முகமது கைரி இஷாக் ஊக்க மருந்து உட்கொண்டது சோதனையில் உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 வயது முகமது கைரி இஷாக் மெத்தன்டியேனொன் (methandienone) எனும் ஊக்கமருந்தை உட்கொண்டதாக கடந்த மாதம் 12ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் தெரியவந்தது.
ஊக்க மருந்துக்கு எதிரான உலக நிறுவனம் இவ்வாண்டு தடை செய்துள்ள மருந்துகளின் பட்டியலில் மெத்தன்டியேனொன் இடம்பெற்றுள்ளது.
அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளிலிருந்து அவர் விலக நேரிட்டது.
ஊக்க மருந்துக்கு எதிரான சிங்கப்பூர் அமைப்பு போட்டிகளுக்கு முந்தைய சோதனைகளை நடத்தியது.
முகமது கைரி இஷாக்கின் தடை இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்ததாக ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்தது.
முகமது கைரி கடந்த ஆண்டு சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளியும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.