ஜெர்மானிய தேசியக் காற்பந்து வீரர்கள் இருவர் மீது கடும் விமர்சனம்
ஜெர்மானியக் காற்பந்துக் கழகமும், ஜெர்மானிய அரசியல்வாதிகள் சிலரும் பிரபல ஜெர்மனி காற்பந்து வீரர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஜெர்மானியக் காற்பந்துக் கழகமும், ஜெர்மானிய அரசியல்வாதிகள் சிலரும் பிரபல ஜெர்மனி காற்பந்து வீரர்களான மீஸட் ஆசிலையும் (Mesut Ozil), இல்கே குண்டோகனையும் (Ilkay Gundogan) கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விமர்சனத்திற்க்குக் காரணம் அவர்கள் இருவரும் துருக்கி அதிபர் தயிப் எர்துவானுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டதற்காக!
கழகத்துக்கும் காற்பந்தாட்டத்துக்கும் முக்கியமான பண்புகளை,
திரு. எர்துவானின் கொள்கைகள் அங்கீகரிக்கவில்லை எனக் காற்பந்துக் கழகத் தலைவர் கூறினார்.
காற்பந்து ரசிகரான திரு. எர்துவானைக் கடந்த ஞாயிறன்று வீரர்கள் லண்டனில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தாங்கள் விளையாடும் பிரிமியர் லீக் அணிகளின் சட்டைகளைப் பரிசளித்தனர்.
அந்தச் சூழலைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறிய கழகத் தலைவர்,
அடுத்த மாதம் துருக்கியில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அந்தப் படங்கள் பயன்படுத்தப்படுவது குறித்துக் கவலை தெரிவித்தார்.
துருக்கியில் நடக்கும் தேர்தலுக்கும் காற்பந்து வீரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் துருக்கி தெரிவித்துள்ளது.
காற்பந்து வீரர்கள் இருவரும் துருக்கியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.