பாரிஸ் நகைக்கடையில் கொள்ளை-4 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகள் மாயம்
பாரிஸில் உள்ள பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் (Ritz Hotel) உள்ள நகைக் கடையில் ஆயுதந்தாங்கிய கொள்ளை நடந்திருக்கிறது.
பாரிஸில் உள்ள பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் (Ritz Hotel) உள்ள நகைக் கடையில் ஆயுதந்தாங்கிய கொள்ளை நடந்திருக்கிறது.
உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் கோடரியுடன் வந்த ஐந்து ஆடவர்கள் கடைச் சன்னலை உடைத்து சுமார் 4 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மூவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
எஞ்சிய இருவர் தப்பிவிட்டனர்.
கைதான நபர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவரின் முயற்சியால் கொள்ளை முயற்சி ஓரளவு தடுக்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் நாளேடு ஒன்று குறிப்பிட்டது.
கொள்ளையர்களில் இருவர் மோட்டார்சைக்கிளில் தப்பிவிட்டதாக அது கூறியது.
மூவரைக் கைதுசெய்ய உதவிய அதிகாரியை, பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பாராட்டியிருக்கிறார்.
சேய்ன் நதிக்கரையோரமாக உள்ள பாதுகாப்பு மிகுந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த கொள்ளை, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு நீதித்துறை அமைச்சின் கட்டடம் அந்த ஹோட்டலுக்கு அடுத்தபடி அமைந்துள்ளது.