கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணை மோசமானது - எதிர்த்தரப்பு வழக்குரைஞர்
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணை மோசமானது என்று எதிர்த்தரப்பு வழக்குரைஞர் குய் சூன் செங் கூறியுள்ளார்.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கு விசாரணை மோசமானது என்று எதிர்த்தரப்பு வழக்குரைஞர் குய் சூன் செங் கூறியுள்ளார்.
வழக்கின் 32 ஆவது நாள் விசாரணையின்போது அவர் அவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நச்சு இரசாயனம் தெளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் தொடர்பில், இந்தோனேசியாவின் சித்தி ஆயிஷா வியட்நாமின் டோவான் தி ஹுவோங் என்ற இரண்டு பெண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செயல்படுவதாகவே அந்தப் பெண்கள் நினைத்தனர் என்று அவர்களின் வழக்குரைஞர் தெரிவித்தார். அந்தப் பெண்கள் கொலை செய்ய நினைக்கவில்லை என்றும் அவர்கள் வடகொரியாவைச் சேர்ந்த நபர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் வழக்குரைஞர் கூறினார்.
தலைமைக் காவல்துறை அதிகாரி வான் அஸிருல் நிஸாம் செ வான் அஸீஸிடம் எதிர்த்தரப்பு வழக்குரைஞர் குய் குறுக்கு விசாரணை நடத்தினார்.
மலேசியக் காவல்துறையினர், குறிப்பிட்ட சில ஆதாரங்களை முறையாக ஆராயத் தவறியதாக குய் வாதிட்டார்.
தமது கட்சிக்காரர் ஆயிஷா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரைக் காண காவல்துறையினர் தம்மை அனுமதிக்கவில்லை என்றும் வழக்குரைஞர் குய் சுட்டினார்.
கண்காணிப்புக் கேமராக்களின் பதிவான சில காட்சிகளையே காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். காவல் துறையினர் முழுமையான ஆதாரங்களைத் திரட்டாதது ஆயிஷா தரப்புக்குப் பாதகமாகி விட்டது என்றும் குய் கூறினார்.
ஆயிஷாவின் கால்சட்டையும் கண்ணாடியும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவருடைய நகரத் துணுக்கிலும், ரத்தத்திலும் VX நச்சு கலந்த அறிகுறி இல்லை என்றும் திரு குய் வாதிட்டார்.