மலேசியா - 4 ஐ.எஸ். பயங்கரவாதச் சந்தேக நபர்களைத் தேடி வரும் காவல்துறையினர்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 4 சந்தேக நபர்களை மலேசியக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோலாலம்பூர்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 4 சந்தேக நபர்களை மலேசியக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் காவல்துறை அதிகாரிகளைக் கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இடங்களைத் தாக்க எண்ணியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே ஐ. எஸ். பிரிவைச் சேர்ந்த மற்ற ஆறு உறுப்பினர்கள், ஜொகூர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவால் பிப்ரவரி 27ஆம் தேதிக்கும் மார்ச் முதல் தேதிக்கும் இடையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் மேலும் நான்கு பேர் இன்னும் தலைமறைவாய் இருப்பதாகவும் அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் கூறப்பட்டது.
அவர்களில் முகமது ஃபைஸால் முகமது ஹனாஃபி, முகமது ஹனாஃபி யா ஆகிய இருவர் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த மலேசியர்கள்.
மூன்றாவது சந்தேக நபரின் பெயர் நூர் ஃபார்க்கான் முகமது ஈஸா. அவர் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மலேசியர் எனக் கூறப்பட்டது.
நான்காவது சந்தேக நபர் தாய்லந்தைச் சேர்ந்த 37 வயது ஆவே வாயீயா.
அவர்களைப் பற்றித் தகவல் அறிந்தவர்கள் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.