அமெரிக்கா தென் கொரியா ஆகஸ்ட் மாதக் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்த இணக்கம்
அமெரிக்காவும், தென் கொரியாவும், ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இணங்கியுள்ளன.
அமெரிக்காவும், தென் கொரியாவும், ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இணங்கியுள்ளன.
இரு நாட்டு அதிகாரிகள் அந்தத் தகவலை வெளியிட்டனர்.
சென்ற வாரம் சிங்கப்பூரில் நடந்த அமெரிக்க-வடகொரிய உச்சநிலைச் சந்திப்பிற்குப் பிறகு, போர் விளையாட்டுகளை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இருப்பினும், மற்ற கூட்டு இராணுவப் பயிற்சிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தென் கொரியத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அதுபற்றிய பரிசீலனை தொடரும் என்று அது கூறியது.
திரு. டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதக் கூட்டுப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
அதன் தொடர்பில், அமெரிக்கக் தற்காப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என்று அந்த அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டது.