அமெரிக்கா: காவல்துறை அதிகாரிகள் ஆடவரை வன்முறையில் கையாளுவதைக் காட்டும் காணொளி
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் மின் அதிர்வு தரும் 'taser gun' ஆயுதத்தைக் கொண்டு 11 முறை ஓர் ஆடவரைத் தாக்குவதைக் காட்டுகிறது காணொளி ஒன்று.
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் மின் அதிர்வு தரும் 'taser gun' ஆயுதத்தைக் கொண்டு 11 முறை ஓர் ஆடவரைத் தாக்குவதைக் காட்டுகிறது காணொளி ஒன்று.
சம்பவம் 2017இல் நடந்தது.
தாக்கப்பட்ட 39 வயது ஜானி வீட்க்ராஃப்ட் (Johnny Wheatcroft) அதிகாரிகள் மீதும் காவல்துறையின் மீதும் தொடுத்த வழக்கின் தொடர்பாக நடைபெறும் விசாரணையின்போது காணொளி வெளிவந்துள்ளதாக Huffpost தெரிவித்துள்ளது.
சம்பவ நாளன்று கிலென்டேல் (Glendale) நகரில் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார் வீட்க்ராஃப்ட்.
அவருடைய நண்பர் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர்கள் காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டனர்.
அதிகாரிகள் வீட்க்ராஃப்ட்டிடம் அடையாள அட்டையைக் கேட்க, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோசமடைந்தது.
அதிகாரிகள் மின் அதிர்வு தரும் ஆயுதத்தால் வீட்க்ராஃப்ட்டைத் தாக்கினர்.
அப்பொழுது வாகனத்தில் அவரது 6 வயது, 11 வயதுப் பிள்ளைகள் இருந்தார்கள்.
அதிகாரிகள் தன்னைக் கையாண்ட முறை தனக்கு மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளுக்கும் மனத்தளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக வீட்க்ராஃப்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதோடு தனது கால்சட்டையைக் கழற்றித் தன்னை மின் அதிர்வு தரும் 'taser gun' ஆயுதம் கொண்டு அதிகாரிகள் தாக்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.