சீனா: இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடலுணவுப் பொட்டலங்களில் கொரோனா கிருமி
சீனாவின் துறைமுக நகரான டாலியானில் (Dalian) இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடலுணவுப் பொட்டலங்களின் வெளிப்பகுதியில் கொரோனா நோய்க்கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் துறைமுக நகரான டாலியானில் (Dalian) இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடலுணவுப் பொட்டலங்களின் வெளிப்பகுதியில் கொரோனா நோய்க்கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவுப்பொருள்கள் யந்தாய் (Yantai) நகரிலுள்ள மூன்று நிறுவனங்களுக்காகத் தருவிக்கப்பட்டவை.
யந்தாய் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், உறைந்த கடலுணவு டாலியானில் இறக்குமதியானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவை எங்கிருந்து வந்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.
கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்ட பொட்டலங்கள், பதப்படுத்தப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வரவழைக்கப்பட்டவை.
அவற்றுள் சில பொட்டலங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் சந்தையில் விற்கப்படவில்லை என யந்தாய் அரசாங்கம் தெரிவித்தது.
கிருமி இருந்த பொட்டலங்கள் ஏற்கனவே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டதா என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியிருந்தது.
நகரின் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக் குழு அதற்கு விடையளிக்க மறுத்துவிட்டது.
கிருமி இருந்த பொட்டலங்களைத் தொட்டவர்கள் தனிமைப்படுத்தும் உத்தரவில் உள்ளனர், அவர்களுக்கு நோய் தொற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.