துபாய் விமான நிலையத்தில் பெண் பாதுகாவலரின் உதவியால் பிறந்த குழந்தை
துபாய் விமான நிலையத்தில் பெண் பாதுகாவலர் உதவியால் இந்தியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
துபாய் விமான நிலையத்தில் பெண் பாதுகாவலர் உதவியால் இந்தியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது.
விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாக "Khaleej Times" நாளேடு தெரிவித்தது.
பிரசவ வலி வந்து பெண் அவதியுற்றபோது ஹன்னான் ஹுசைன் முகமது (Hanan Hussein Mohammed) என்னும் பெண் பாதுகாவலர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
உடனடியாக அவர் அந்த கர்ப்பிணியை, பயணிகளைச் சோதனையிடும் அறைக்கு அழைத்துச் சென்று சிசுவைப் பிரசவிக்க உதவினார்.
பிறந்த குழந்தை பேச்சு மூச்சின்றிக் காணப்பட்டதும், ஹன்னான் குழந்தைக்கு CPR எனும் இதயத் துடிப்பு சிகிச்சையளித்து உயிர் கொடுத்தார்.
அதன் பின் தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக "Khaleej Times" குறிப்பிட்டது.
ஹன்னானின் இந்தக் கருணைமிக்க செயலுக்கு, அவருக்கு விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.