அசாஞ்ச்சை வெளியேற்றியபின் கடுமையான இணையத் தாக்குதல்களை எதிர்நோக்கும் எக்குவடோர்
Wikileaks நிறுவனர் அசாஞ்ச்சிற்கான அடைக்கலம் மீட்டுக்கொள்ளப்பட்டபின் தனது இணையப் பக்கங்கள் மீதான இணையத் தாக்குதல் அதிகரித்துள்ளதாக எக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Wikileaks நிறுவனர் அசாஞ்ச்சிற்கான அடைக்கலம் மீட்டுக்கொள்ளப்பட்டபின் தனது இணையப் பக்கங்கள் மீதான இணையத் தாக்குதல் அதிகரித்துள்ளதாக எக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அமைப்புகளின் இணையப் பக்கங்கள் மீது 40 மில்லியன் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக, நாட்டின் தகவல், தொடர்புத் தொழில்நுட்பத் துறைத் துணையமைச்சர் பாட்ரிஷியோ ரியல் (Patricio Real) குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை அந்தத் தாக்குதல்கள் தொடங்கியதாக அவர் சொன்னார்.
முக்கியமாக அவை, அமெரிக்கா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி, ரொமேனியா, ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அசாஞ்ச்சுடன் தொடர்புடைய குழுக்கள் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சு, மத்திய வங்கி, அதிபர் அலுவலகம், உள்நாட்டு வருவாய்ச் சேவை, சில அமைச்சுகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை, இணையத் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அவற்றின் தகவல்கள் திருடப்பட்டதாகவோ, அழிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை.
லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்திருந்த அசாஞ்ச் அண்மையில் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
ஏழு ஆண்டுகளாக அந்தக் கட்டடத்தில், சுயமாக நாடுகடந்து வாழ்ந்து வந்த அசாஞ்ச்சுக்கான அரசதந்திரப் பாதுகாப்பை, எக்குவடோர் அதிபர் லெனின் மொரெனோ (Lenin Moreno) மீட்டுக்கொண்டது அதற்குக் காரணம்.
ஏனைய நாடுகளின் விவகாரங்களில் அசாஞ்ச் தலையிடுவதாகவும், வேவு பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
முன்னைய அதிபர் அசாஞ்ச்சிற்கு வழங்கியிருந்த குடியுரிமை, அகதி எனும் தகுதி-இரண்டையும் திரு. மொரெனோ மீட்டுக்கொண்டார்.