ஒட்டுமொத்தமாய்ப் பதவி விலகிய ரஷ்ய அரசாங்கம்
ரஷ்ய அரசமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்போவதாக அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்த சில மணி நேரத்தில் அங்குள்ள அரசாங்கம் முழுமையாகப் பதவி விலகி விட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ரஷ்ய அரசமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்போவதாக அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்த சில மணி நேரத்தில் அங்குள்ள அரசாங்கம் முழுமையாகப் பதவி விலகி விட்டது.
திரு. புட்டின் விரும்பும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக தம்முடைய அமைச்சரவை பதவி விலகியதாக ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Med-ve-dev) கூறினார்.
முக்கியமான பொறுப்புக்குரிய தலைவர்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்று திரு. புட்டின் பரிந்துரைத்துள்ளார்.
வருங்காலத்தில், ஒருவர் இரண்டு தவணைகள் மட்டுமே ரஷ்ய அதிபராக இருக்கலாம் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் திரு. புட்டின் விரும்புகிறார்.
அரசமைப்புச் சட்டத்தைச் சீரமைப்பதன் மூலம் திரு. புட்டின், தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிபருக்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மாற்றிவிடப்படும்.
2024ஆம் ஆண்டில் அதிபர் புட்டினுடைய நான்காம் தவணைக்காலம் முடிவுக்கு வரும்.
என்றாலும், தொடர்ந்து பதவியில் நீடிக்கும் வகையில் அவர் புதிய பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற ஊகம் நிலவுகிறது.