Notre-Dame தேவாலயத்தைச் சீரமைக்க பிரெஞ்சு செல்வந்தர் 100 மில்லியன் யூரோ வழங்க உறுதி
பாரிசின் புகழ்பெற்ற Notre-Dame தேவாலயம், தீயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் சீரமைப்புப் பணிகளுக்காக, 100 மில்லியன் யூரோ (113 மி. டாலர்) நன்கொடை வழங்க, செல்வந்தர் ஒருவர் உறுதி கூறியிருக்கிறார்.
பாரிசின் புகழ்பெற்ற Notre-Dame தேவாலயம், தீயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் சீரமைப்புப் பணிகளுக்காக, 100 மில்லியன் யூரோ (113 மி. டாலர்) நன்கொடை வழங்க, செல்வந்தர் ஒருவர் உறுதி கூறியிருக்கிறார்.
Gucci, Yves Saint Laurent உள்ளிட்ட பிரபல நிறுவனங்களைக் கொண்ட கெரிங் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு.
ஃபிரான்சுவா ஓன்ரி பினோ (Francois-Henri Pinault) அந்த உறுதியை வழங்கினார்.
Notre-Dame தேவாலயத்தை மீண்டும் முழுமையாகக் கட்டியெழுப்பத் தேவையான முயற்சிகளுக்கு அந்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
உலகெங்கும் உள்ள வரலாற்றுப் பிரியர்களை உலுக்கியுள்ள அந்தத் தீச் சம்பவத்தையொட்டி அமெரிக்காவிலும் நிதித் திரட்டு தொடங்கியுள்ளது.
தேவாலயத்தில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்படும் முன்னரே, உலகெங்கும் அதைச் சீரமைக்கத் தேவையான நிதித் திரட்டு முயற்சிகள் தொடங்கிவிட்டன.
நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட பிரெஞ்சு மரபுடைமைச் சங்கமும், இணையவாசிகளிடமிருந்து நிதி திரட்டும் Go Fund Me தளமும், அந்த முயற்சியில் முதலில் இறங்கின.
பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும், Notre-Dame தேவாலயத்தை மறுசீரமைக்கத் தேவையான நிதியைத் திரட்ட அனைத்துலக இயக்கம் அறிமுகம் செய்யப்படுமெனக் கூறியிருக்கிறார்.