தொலைந்துபோன பெருச்சாளியைக் கண்டுபிடித்த காவல்துறை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
குடியிருக்க வீடில்லாத கிறிஸ் (Chris) எனும் 59 வயது ஆடவர், தான் ஆசையாக வளர்த்த லூசி என்ற பெருச்சாளியை இரண்டு வாரத்திற்கு முன்னர் தொலைத்துவிட்டார்.
ஆனால், தற்போது காவல்துறை அதிகாரிகளின் உதவியால் லூசி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு கிறிஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிட்னி வட்டாரத்தில் கிறிஸ்ஸும், லூசியும் பிரபலமானவர்கள்.
இரண்டு வாரத்திற்கு முன் தான் எப்போதும் லூசியை அடைத்து வைக்கும் பெட்டியில் விட்டுவிட்டுக் கழிப்பறைக்குச் சென்றார் கிறிஸ்.
திரும்பி வந்த கிறிஸ்ஸூக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது செல்லப் பிராணியான லூசி அங்கு இல்லை.
அதை யாரோ திருடிவிட்டதாக நினைத்து அவர் சோகத்தில் மூழ்கினார்.
கிறிஸ்ஸின் நிலையைக் கண்ட மக்கள் Facebook மூலம் பெருச்சாளியைத் தேடக் கோரிக்கை விடுத்தனர்.
அவ்விருவரும் ஒன்றாக இருக்கும் படம், பலரால் இணையத்தில் பகிரப்பட்டது.
சாலையில் தனியாகத் திரிந்து கொண்டிருந்த லூசியை கண்டுபிடித்த பெண்மணி ஒருவர் அதனைக் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கிறிஸ்ஸையும், லூசியையும் மீண்டும் இணைத்து வைத்தனர்.
பெருச்சாளி திரும்பி வந்ததில் பெருமகிழ்ச்சி கிறிஸ்ஸுக்கு !