எண்ணெய்க் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் காரணம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ , ஓமானிய வளைகுடாப் பகுதியில் 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று சாடியுள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ , ஓமானிய வளைகுடாப் பகுதியில் 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று சாடியுள்ளார்.
புலனாய்வுத் தகவல்கள், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தாம் அதனைக் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் ஈரான் அந்தக் கப்பல்களைத் தாக்கி சேதப்படுத்தியதாகத் திரு. பொம்பேயோ கூறினார்.
அந்தச் சம்பவம் அனைத்துலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் சொன்னார்.
அந்த வட்டாரத்தில் வாஷிங்டன் அதன் துருப்புகளைத் தற்காத்துக்கொள்ளும் என்று கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அதற்கான திட்டங்கள் எதனையும் குறிப்பிடவில்லை.
தாக்குதலுக்குள்ளான கப்பல்களில் ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் MT Front Altair என அடையாளங்காணப்பட்டுள்ளது.
மற்றொன்று ஜப்பானின் Kokuka Sangyo நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்தக் கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து மெத்தனால் (methanol) ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் வரும் வழியில் தாக்கப்பட்டது.