Notre-Dame தேவாலயம் 5 ஆண்டுக்குள் சீரமைக்கப்படும்: பிரெஞ்சு அதிபர் உறுதி
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தீயால் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5 ஆண்டுக்குள் சீரமைக்க உறுதியளித்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தீயால் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5 ஆண்டுக்குள் சீரமைக்க உறுதியளித்துள்ளார்.
இன்று காலை ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் அதனைத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தீயணைப்பாளர்கள், காவல்துறையினர் ஆகியோருடன், தேவாலயப் புனரமைப்புக்கு நிதியுதவி வழங்க முன்வந்தோருக்கும் அதிபர் மக்ரோன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
850 ஆண்டு காலப் பழமை வாய்ந்த Notre-Dame தேவாலயம் தீயினால் பெருத்த சேதமடைந்த மறுநாள் அதிபரின் உரை ஒளிபரப்பானது.
சம்பவம் குறித்து பிரெஞ்சு அரசாங்க வழக்குரைஞர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாரும் வேண்டுமென்றே தீ மூட்டியதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அதனை விபத்தாகவே கருதவேண்டும் என்று அரசாங்க வழக்குரைஞர்கள் கூறினர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.