மலேசியா: வாளியில் மூழ்கி 14 மாதப் பிள்ளை மரணம்
வாளியில் இருந்த நீரில் மூழ்கி, உணர்வற்ற நிலையில் இருந்த பிள்ளையை அதன் பெற்றோர் கண்டெடுத்ததாக மலேசியக் காவல்துறை கூறியது.
மலேசியாவில், வாளியில் மூழ்கி 14 மாதப் பிள்ளை மரணமடைந்தது. மலாக்காவிற்கு அருகே உள்ள ஜசின் (Jasin) என்ற ஊரில் நேற்று (13 டிசம்பர்) சம்பவம் நடந்தது.
வாளியில் இருந்த நீரில் மூழ்கி, உணர்வற்ற நிலையில் இருந்த பிள்ளையை அதன் பெற்றோர் கண்டெடுத்ததாக மலேசியக் காவல்துறை கூறியது.
மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கழிப்பறையில் தண்ணீர்ச் சத்தம் கேட்டு அங்கு சென்றார் பிள்ளையின் தாயார்.
வாளியில் தலைகீழாக விழுந்துகிடந்த பிள்ளை, உணர்வற்று இருந்ததைக் கண்டு அவர் தம் கணவரை அழைத்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிள்ளை, மாண்டுவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பிள்ளையின் உடலில் காயங்கள் இல்லை என்றும் குற்றம் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் காவல்துறையினர் கூறினர்.
விசாரணை தொடர்கிறது.