விமானப் பயணங்களில் நம்பிக்கை மீண்டும் ஏற்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்: அமைச்சர் S. ஈஸ்வரன்
விமானப் பயணங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த அனைத்துத் தரப்புகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.
விமானப் பயணங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த அனைத்துத் தரப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட அவசியமில்லாத பாதுகாப்பான விமானச் சேவைகளை வழங்க அது முக்கியம் என்றார் அவர்.
அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்கும் முக்கியத் தருணத்தில் அனைவரும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைப்பின் கோவிட்-19 தொடர்பான உயர்நிலைக் கருத்தரங்கில் திரு. ஈஸ்வரன் பேசினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்காக அண்மையில் சிங்கப்பூர் செயல்படுத்தியுள்ள சிறப்புப் பயண ஏற்பாடு குறித்தும் அவர் பேசினார்.
அத்தகையோர் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றின் 11 நாடுகளுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுவதாகத் திரு. ஈஸ்வரன் தெரிவித்தார்.
விமானச் சேவைகளை மீண்டும் நிலைநிறுத்தி, பொருளியலை மீண்டும் செயற்படுத்த நாடுகள் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நோய்ப்பரவலுக்குப் பிந்திய புதிய இயல்புநிலைக்குப் பழகிக்கொள்ள அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைப்பு அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.