நேப்பாளத்துக்கு இட்டுச்செல்லும் ரயில்பாதையைக் கட்டவிருக்கும் சீனா
எல்லைத் தாண்டிய இணைப்பு நேப்பாளத்தின் முன்னுரிமைகளில் ஒன்று எனப் பிரதமர் ஒலி சொன்னார்.
நேப்பாளத்துக்கு இட்டுச்செல்லும் ரயில்பாதையைச் சீனா கட்டவிருப்பதாகச் சீன நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கில் திபெத்துடன் நேப்பாளத்தை இணைக்கும் ரயில்பாதையைக் கட்டுவது குறித்த உடன்பாடு ஒன்றில் நேப்பாளப் பிரதமர் காட்கா பிரசாட் ஷர்மா ஒலி கையெழுத்திட்டிருக்கிறார்.
பெய்ஜிங்கிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட அவர் கையெழுத்திட்ட சில இருதரப்பு உடன்பாடுகளில் அதுவும் ஒன்று.
திபெத்திய நகரான சிகேஸ்ஸை (Xigaze) நேப்பாளத் தலைநகர் காத்மண்டுடன் இணைக்க ரயில் பாதை உதவும் என்று நம்பப்படுகிறது.
போக்குவரத்து, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதி, அரசியல் ஒத்துழைப்பு போன்றவற்றில் பத்துக்கும் மேற்பட்ட இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்தாகின.
விமானப் போக்குவரத்துவழி இமாலயத்தைத் தாண்டிய இணைப்புக் கட்டமைப்பை அமைக்கவும் சீனா எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.
எல்லைத் தாண்டிய இணைப்பு நேப்பாளத்தின் முன்னுரிமைகளில் ஒன்று எனப் பிரதமர் ஒலி சொன்னார்.
நீர்மின்திறன் வளங்களை மேம்படுத்த சீனாவுடன் நேப்பாளம் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.