சமூக ஊடக ஆபத்துகளைக் கையாள உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்: நியூசிலந்துப் பிரதமர்
சமூக ஊடகங்கள் தொடர்பான ஆபத்துகளைக் கையாள உலக அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டென் அழைப்பு விடுத்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
சமூக ஊடகங்கள் தொடர்பான ஆபத்துகளைக் கையாள உலக அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டென் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது நாட்டு மக்களின் நலன் மீது கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறினார்.
ஆனால், அதே வேளையில், சில பிரச்சினைகளை உலகத் தலைவர்கள் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிரைஸ்ட்சர்ச் நகரில், கடந்த வாரம் நடந்த படுகொலைச் சம்பவத்தை துப்பாக்கிக்காரன் 17 நிமிடங்களுக்கு நேரடியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தான்.
அந்தக் காணொளியை 200 முறைக்கும் குறைவாக மக்கள் கண்டனர் என்று Facebook தெரிவித்தது.
அதற்குப் பின் அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.
அதைத் தடுக்க, நிறுவனம் கிட்டத்தட்ட அந்த காணொளிக் காட்சிகள் கொண்ட ஒன்றரை மில்லியன் காணொளிகளை நீக்க வேண்டியிருந்ததாக அது தெரிவித்தது.
ஆனால் தனது வலைத்தளங்களில், பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நீண்ட காலமாக சமூக ஊடக நிறுவனங்கள் கூறி வருகின்றன.
நிறுவனங்கள் லாபம் மட்டும் வேண்டும், பொறுப்புகள் வேண்டாம் என்ற போக்கைக் கொண்டிருக்கக்கூடாது என்று நியூசிலந்துப் பிரதமர் பதிலடி கொடுத்தார்.