ஆஸ்திரேலியா: மதுபானக் கடையின் வெளியே முகமூடி அணிந்து கண்டபடித் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தெற்குக் கரையோரம் நடத்தப்பட்ட முற்றுகைக்குப் பிறகு, காவல்துறையினர் ஒருவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தெற்குக் கரையோரம் நடத்தப்பட்ட முற்றுகைக்குப் பிறகு, காவல்துறையினர் ஒருவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
விண்டாங் (Windang) புறநகர்ப் பகுதியில் ஒருவரைக் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலியக் காவல்துறை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இனி அச்சுறுத்தல் ஏதும் இல்லை. எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரருக்கும் காவல்துறையினருக்கும் இடையே அந்த வட்டாரத்தில் சிறு மோதல் நடந்ததாகத் தகவல் வெளியானது.
நீண்ட துப்பாக்கி வைத்திருந்த ஒருவர், மதுபானக் கடைக்கு வெளியே கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொண்டிருந்ததாக ABC செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
சில சாலைகளை மூடிய அதிகாரிகள், மக்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று கூறினர்.
அந்த வட்டாரத்தில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.