மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் நேரடி விமானங்களுக்குத் தடை விதிக்கும் நியூசிலந்து
மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் நேரடி விமானங்களை நியூசிலந்து நிறுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் நேரடி விமானங்களை நியூசிலந்து நிறுத்தியுள்ளது.
பெர்த் (Perth) நகரில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, நியூசிலந்து அங்கிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் இதர பகுதிகளுக்கு நியூசிலந்திலிருந்து வழக்கம்போல பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இருநாடுகளும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தடையற்ற பயண முறையை அறிமுகம் செய்தன.
அதையடுத்து விமானச் சேவைகள் இவ்வாறு தடை செய்யப்படுவது இது இரண்டாவது முறை.
மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக மூவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், மற்றொரு முடக்கநிலையை அறிமுகம் செய்ய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹோட்டல் பாதுகாவலர் பாதிக்கப்பட்டோரில் ஒருவர்.
அவர் கிருமித்தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்.
அவருடன் ஒரே வீட்டில் தங்கியுள்ள இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-AFP