மடிந்த மரங்களை மரச் சிற்பங்களாக்கி உயிரூட்டும் தச்சர்
இத்தாலியின் ரோம் நகரில் இளம் தச்சர் ஒருவர், நகரில் உள்ள மடிந்துபோன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை உருவாக்கிக் காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
இத்தாலியின் ரோம் நகரில் இளம் தச்சர் ஒருவர், நகரில் உள்ள மடிந்துபோன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை உருவாக்கிக் காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
22 வயது ஆண்ட்ரியா கண்டினி சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் மரச் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினார். இதுவரை அவர் சுமார் 66 மரங்களின் தூர்ப்பகுதியைச் சிற்பமாக மாற்றியுள்ளார்.
நகர் முழுவதும் சுமார் 313,000 மரங்களைக் கொண்டுள்ள பசுமையான நகரம் ரோம். அவற்றுள் சில மரங்களுக்கு வயது 100. அத்தகைய வயதான மரங்கள், இலைகளை உதிர்த்துவிட்டுப் பட்டுப்போய் விட்டன.
பொலிவிழந்த மரங்களுக்குப் புத்துயிர் கொடுக்கத் தீர்மானித்தார் கண்டினி. மரங்களின் அடித் தூரில் முகங்கள் அல்லது உருவங்களைச் செதுக்கி அந்த இடத்தையே அழகுபடுத்தி விடுகிறார்.
சிறு வயதிலிருந்தே சிற்பக்கலையில் ஈடுபட்டு வருகிறார் அவர்.
உளியையும் கொட்டாப்புளியையும் கையில் எடுத்தாரென்றால், ஒரு வாரத்தில் ஒரு மரத்தூர் உயிருள்ள சிற்பமாக மாறிவிடுகிறது.
நகரின் பற்பல இடங்களில் இருக்கும் அவரது கைவண்ணம், பலரையும் பாதிவழியில் நிறுத்தி ரசிக்க வைக்கிறது.
ஆனால் கண்டினியின் கலையார்வத்துக்கு ரோம் நகர அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொது ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், வரலாற்றுத் தலங்களில் கண்டினிக்குத் தடை விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளது காவல்துறை.
பட்டுப்போன மரத் தூர்களில் சிற்பம் வடிப்பதைத் தடை செய்யும் சட்டம் ஏதும் ரோமில் இல்லை.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நகரின் பழைய மரங்கள் தமக்குக் கவலையளிப்பதாகக் கூறுகிறார் கண்டினி.
கூடிய விரைவில் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் விரைவில் அவை மறைந்துவிடும் என்று கவலைப்படுகிறார் கண்டினி.